ஷா ஆலாம், ஜூன்.29-
தேசிய வனவியல் சட்டம் 2022-ஐ உடனடியாகச் செயல்படுத்த மாநில அரசுகளை சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹுவாங் தியோங் சி வலியுறுத்தினார். நாட்டின் வனப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இஃது உதவும் என்றார்.
இதுவரை கூட்டரசு பிரதேசங்களும், பெர்லிஸ் மாநிலமும் மட்டுமே இச்சட்டத் திருத்தத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளன. 1992-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பூமி உச்சநிலை மாநாட்டில் அளித்த உறுதிமொழிக்கு இணங்க, நாட்டின் நிலப்பரப்பில் குறைந்தது 50 விழுக்காடு காடுகளாலும் மரங்களாலாலும் மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதியாக உள்ளது. மேலும், உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழல் நிதிப் பரிமாற்றம் – இஃப்டிக்கான நிதி இந்த ஆண்டு 200 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 250 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.