மூவரின் சடலங்கள் சொந்த ஊர்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்டன

கோல திரங்கானு, ஜூன்.29-

திரங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் அருகே நேற்று இரவு படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் தகனம் செய்வதற்காக பட்டர்வொர்த்துக்கும் சுங்கை பட்டாணிக்குக்கும் கொண்டுச் செல்லப்பட்டன. 40 வயதான எஸ். ஆறுமுகம், அவரது 3 வயது மகள் ஏ. சர்விக்கா, 10 வயது உறவினர் வி. வெண்பனி ஆகியோர் இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர். பிரேதப் பரிசோதனை முடிந்துள்ள நிலையில், மூன்று உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக திரங்கானு மாநில முதல்வரின் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி டாக்டர் கே. பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அப்படகில் பயணித்த இந்த 15 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு வந்து இன்று சுங்கை பட்டாணிக்கும் பட்டர்வொர்த்திற்கும் திரும்பவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், பூலாவ் பெர்ஹெந்தியானின் சிறிய தீவிலிருந்து பெரிய தீவிற்கு இரவு உணவு முடிந்து திரும்பிக் கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பெரும் அலைகள் படகைக் கவிழ்த்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் இன்னும் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் உள்ளனர்.

WATCH OUR LATEST NEWS