தாதியர் வேலைக்குப் பணியிடங்கள் இருக்கின்றன, ஆனால் விண்ணப்பங்கள் இல்லை – சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி தகவல்

கோலாலம்பூர், ஜூன்.29-

போதுமான பணியிடங்கள் இருந்தும் விண்ணப்பதாரர்கள் இல்லை. ஆம். இதுதான் தற்போது சுகாதாரத் துறையில் குறிப்பாக, தாதியர்கள் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றது எனக் கூறியிருக்கிறார் சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அஹ்மாட். தாதியர் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்திய போதிலும், இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியவில்லை என்றும், இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க சுகாதார அமைச்சுக்கு சிறிது அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்.

மேலும், 2020 முதல் கடந்த ஆண்டு வரை 2,141 தாதியர்கள் உட்பட மொத்தம் 6,919 சுகாதாரப் பணியாளர்கள் அதிகச் சலுகைகளுக்காகத் தனியார் துறைக்கு மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தனியார் துறையுடன் இணைந்து இடைக்கால நடவடிக்கைகள், வெளிநாட்டு தாதியர்களை நியமிப்பது போன்ற பல்வேறு அணுகுமுறைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும், அதே சமயம் தாதியர்களின் ஊதிய உயர்வும் சலுகைகளும், அவர்களின் மன உறுதியை உயர்த்துவதற்காகவே என்றும் சுல்கிஃப்லி அஹ்மாட் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS