சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படம், வடசென்னைப் பின்னணியைக் கொண்ட கதை அம்சம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
‘வாடிவாசல்’ திரைப்படம் முக்கியக் காரணங்களால் தாமதமாகி வருவதை அடுத்து, சிம்பு படம் தொடங்கப்பட்டதாகக் கூறினார். மேலும், இந்தப் படம் ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகமா என்று பலர் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், “கண்டிப்பாக இது அந்த படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. தனுஷ் நடிக்கும் படம் தான் ‘வடசென்னை 2’,” என்று வெற்றிமாறன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆனால், அதே நேரத்தில், இப்படத்தில் ‘வடசென்னை’ படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் வருகின்றன என்றும், வடசென்னை படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒரே காலக் கட்டத்தில் நடக்கும் கதை என்றும் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனுஷ்தான் ‘வடசென்னை’ படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அவருடைய அனுமதி இன்றி அந்தப் படத்தில் உள்ள காட்சிகளையோ, கதாபாத்திரங்களையோ பயன்படுத்த முடியாது. இது குறித்து அவரிடம் பேசியபோது, தாராளமாக இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களையோ, காலக் கட்டத்தையோ பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அதற்கு அனுமதி கொடுப்பதாகவும் பணம் எதுவும் வேண்டாம் எனவும் தனுஷ் கூறியதாக வெற்றிமாறன் தெரிவித்தார்.
ஆனால், சில யூடியூப் சேனல்களில் தனுஷ் பணம் கேட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி தனக்கு மன வருத்தத்தை அளித்துள்ளதாக வெற்றிமாறன் குறிப்பிட்டார்.