சுபாங் ஜெயா வட்டாரப் பேரவையின் திருமுறை ஓதும் விழா

சுபாங் ஜெயா. ஜூன்.30

மலேசிய இந்து சங்கத்தின் சுபாங் ஜெயா வட்டாரப் பேரவையின் 47 ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா, சுபாங் ஜெயா, துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இத்திருமுறை ஓதும் விழாவில் சுமார் 180 மாணவர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.

காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் முதல் முறையாக நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சமயத்தையும், நன்னெறிப் பண்புகளையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கிலேயே மாணவர்களை இலக்காகக் கொண்டு இத்திருமுறை ஓதும் விழா நடத்தப்பட்டதாக மலேசிய இந்து சங்கத்தின் சுபாங் ஜெயா வட்டாரப் பேரவையின் தலைவர் புகழ் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் சங்கபூஷணம் மனோகரன், துணைத் தலைவர் தொண்டர்மணி சரஸ்வதி வேலு, பெட்டாலிங் வட்டாரத் தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் கோவிந்தசாமி மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிந்தனர்.

இந்தத் திருமுறை ஓதும் விழாவைச் சிறப்பாக நடத்திய சுபாங் ஜெயா வட்டாரப் பேரவையின் தலைவர் புகழ் தலைமையிலான செயற்குழுவினரை மனோகரன் வெகுவாகப் பாராட்டினார்.

நமக்கு இரு கண்கள் எவ்வாறு முக்கியமோ அது போன்று நமக்கு கல்வியும், திருமுறையும் இரு கண்களாகும் என்று மனோகரன் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு கோலம் போட்டி, பூச்சரம் தொடுக்கும் போட்டி, தோரணம் பின்னுதல் போட்டி என தமிழர்களின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டுப் போட்டிகளும் சிறப்பாக நடத்தப்பட்டன. பெற்றோர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர். விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பங்கேற்ற மாணவர்களுக்கு நன்சான்றிதழும் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது.

WATCH OUR LATEST NEWS