புத்ராஜெயா, ஜூன்.30-
துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ அந்தோணி கேவின் மொராயிஸ் கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர். குணசேகரன் உட்பட 6 பேரின் ஆகக் கடைசியான மேல்முறையீட்டில் அவர்களின் தலைவிதியை உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கவிருக்கிறது.
அப்பீல் நீதிமன்றத் தலைவர் டான் ஶ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ ரோட்ஸாரியா ஆகியோருடன் இணைந்து 6 பேரின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை விசாரணை செய்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட், நாளை தீர்ப்பளிக்கப்படும் என்றார்.
நாளை காலை 9 மணிக்குத் தீர்ப்பு அளிக்கப்படவிருப்பதாக டாக்டர் குணசேகரன் வழக்கறிஞர் ஜஸ்மின் சியோங் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
62 வயது டாக்டர் குணசேகரன், 54 வயது எஸ். ரவிச்சந்திரன், 33 வயது ஆர். டினேஸ்வரன், 32 வயது ஏ.கே தினேஷ் குமார், 35 வயது எம். விஸ்வநாத், மற்றும் 32 வயது எஸ். நிமலன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை எதிர்த்து ஆகக் கடைசியான மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 7 மணிக்கும் இரவு 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 55 வயது கேவின் மொராயிஸைக் கடத்திச் சென்று, சுபாங் ஜெயாவில் மிகக் கொடூரமாகக் கொன்ற குற்றத்திற்காக அறுவருக்கும் ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது. அத்தண்டனையைக் கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி, அப்பீல் நீதிமன்றம் உறுதிச் செய்தது.