கோல திரங்கானு, ஜுன்.30-
படகு ஓட்டுநரின் கவனக்குறைவினால் மூவரின் உயிரைப் பறித்த இயந்திரப் படகு கவிழ்ந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனத்தின் உரிமத்தை பறிக்கும்படி கடல் சார் போலீசாரிடம் திரெங்கானு மாநில அரசு பரிந்துரைக்கவிருக்கிறது.
இந்தச் சம்பவம் திரெங்கானு மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால் இது போன்ற பொறுப்பற்ற படகு ஓட்டுநர்களைப் பணிக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாநில சுற்றுலா, கலை, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் மீதான ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

சுற்றுப் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாத படகு நிறுவனங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
திரெங்கானு மாநிலத்தில் பவளப் பாறைத் திட்டு நிறைந்த அழகிய கடற்பகுதியான பூலாவ் பெர்ஹெந்தியானில் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சுற்றுப்பயணிகளை ஏற்றி வந்த இயந்திரப் படகு, அதன் ஓட்டுநரின் கவனக்குறைவினால் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்த வேளையில் ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார். மேலும் 11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் பினாங்கு, பட்டர்வொர்த்தைச் சேர்ந்த 40 வயது எஸ். ஆறுமுகம், அவரின் 3 வயது மகள் ஏ. சர்விகா, உறவுக்காரரான 10 வயது வி. வெண்பனி ஆகியோர் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
மொத்தம் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 வயது சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்றும், கடல் கொந்தளிப்பும் நிலவிய சுழலில் அந்த படகு ஓட்டுநர், படகைச் செலுத்த முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.