கோலாலம்பூர், ஜூலை.09-
“முதலில் வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்” என்ற கடன் அல்லது கொள்முதல் திட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மாணவர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என உயர்க்கல்வி அமைச்சு நினைவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் கடன் பெற்று இருப்பது குறித்து தமது அமைச்சு புகார் பெற்று இருப்பதாகவும், அது அதிக வட்டி விகிதத்துடன் கூடிய கடனாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மாணவர்கள் தாங்கள் அறியாமல் கடன் சுமையில் சிக்க வைக்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் கூறினார்.
பல தரப்பினர் தம்மைத் தொடர்பு கொண்டு, அதிகரித்து வரும் கடன் தொடர்பான இந்தப் பிரச்னை குறித்து தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் எந்த தரப்பினர் என்பதைக் குறிப்பிடத் தாம் விரும்பவில்லை என்றாலும் பெறப்பட்ட பல புகார்கள் மாணவர்கள் அதிக அளவு கடனில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருப்பதாகக் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.