பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பொருளாதாரா அமைச்சர் ரஃபிஸி ரம்லி ஆகியோரின் வீடுகளுக்கு முகவரியிடப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்களில் அபாயகர போதைப்பொருள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. மாறாக, பற்பசை மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
இன்று ஷா ஆலாமில், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டத்தோ ஹுசேன் ஒமார், அப்பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த இரு பொட்டலங்களையும் ஒரே நபர்தான் அனுப்பியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆடவரை அடையாளம் காணும் நடவடிக்கையைப் போலீசார் துரிதப்படுத்தப்பட்டுயிருப்பதாகவும் ஹுசேன் ஒமார் விளக்கினார்.
கடந்த திங்கட்கிழமை, சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி வான் கமருல் அஸ்ரான் வான் யூசுப் வெளியிட்ட தகவலின்படி இதற்கு முன்பு, புத்ராஜெயா, அரசாங்க நிர்வாக பாதுகாப்பு மையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற புகாரில் மேற்கண்ட இரு அரசியல்வாதிகளின் பெயர்களுக்கும் பொட்டலங்கள் பெறப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
சம்பந்தப்பட்ட தலைவர்களின் அலுலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த பொட்டலங்களில் தடைச் செய்யப்பட்ட கஞ்சா இலைகள் இருந்தது தெரியவந்தது என்று வான் கமருல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.