தமது வீட்டில் நாய்களைp பிடிக்க வந்த பெட்டாலிங் ஜெயா அமலாக்கப் பணியாளர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததுடன், அந்த பணியாளர்கள் தம்மை தாக்கி சித்ரவதைச் செய்ததாக நாடகம் ஆடிய முதியவர் ஒருவர் இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
69 வயதான பேட்ரிக் கோ என்ற அந்த முதியவர், அமலாக்கப் பணியாளர்கள் தம்மை தாக்கி விட்டதைப் போல் பொது மக்கள் மத்தியில் கவன ஈர்ப்பு செய்த போதிலும், மாநகர் மன்ற ஊழியர்களின் பணிக்கு அவர் இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அந்த முதியவர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி இரவு 9 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, தாமான் கனகாபுரத்தில் உள்ள தமது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்ப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது கூடிய பட்சம் 10 ஆயிரம் வெள்ளி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த முதியவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.