சிரம்பானில் குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் தொட்டிலில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் கண்டறியப்பட்ட 7 மாத ஆண் குழந்தையின் மரணத்திற்கு, கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று மே 20-ஆம் தேதி புதன்கிழமை, ரெம்பாவ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையின் ஆரம்ப முடிவுகளில், இது தெரியவந்துள்ளதாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசாஹர் அப்துல் ரகீம் தெரிவித்துள்ளார்.
எனினும், அதனை முழுமையாக உறுதி செய்வதற்காக மேலதிக பரிசோதனை முடிவுகளுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, கடந்த மே 19-ஆம் தேதி, 38 வயதுடைய குழந்தை பராமரிப்பாளரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








