கோலாலம்பூர், மே 15-
சமூக பாதுகாப்பு அமைப்பான- SOCSO-வில், தங்களது தொழிலாளர்களை விரைந்து பதிவதற்கு, முதலாளிமார்களுக்கு 30 நாள் அவகாசம் வழங்கப்படுவதாக, அதன் தலைமை நிர்வாகி அஸ்மான் அஜீஸ் முகமது தெரிவித்தார்.
வழங்கப்பட்ட கால வரையறைக்குள் முதலாளிமார்கள், தத்தம் தொழிலாளர்களை பதிந்துக்கொண்டால், தண்டம் விதிப்பதிலிருந்தும் தாமதமாக சந்தாவை செலுத்தியதற்கான தண்டனையிலிருந்தும் அவர்களுக்கு விலக்களிப்பு வழங்கப்படும் என்றாரவர்.
வருகின்ற ஜூன் 1ஆம் தேதியிலிருந்து தமது தரப்பு OP KESAN சோதணையை மேற்கொள்ளவுள்ளது. அதன் கீழ், SOCSO-வில் தொழிலாளர்களை பதிய மறுக்கும் முதலாளிமார்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் வெள்ளி தண்டம் விதிக்கப்படும்.
தாமதமாக சந்தாவைச் செலுத்தினால், ஆண்டுக்கு 6 விழுக்காடு வட்டி விதிக்கப்படும். அது தவிர, அத்தரப்பினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு 10 ஆயிரம் வெள்ளி வரையிலான தண்டம் அல்லது ஈராண்டுகள் சிறை அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம்.
தொழிலாளர்களின் சமூக நலனை உறுதி செய்வதில், தமது தரப்பு விட்டுக்கொடுக்கும் போக்கைக் கொண்டிருக்காது என அஸ்மான் அஜீஸ் முகமது நினைவுறுத்தினார்.