கிளாந்தான், ஏப்ரல் 12-
காலாவதியான சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் BMW ரக காரை ஓட்டி வந்த 30 வயதுடைய ஆடவர் ஒருவர் போலீசிடம் கையும் களவுமாக சிக்கினார்.
கிளாந்தான், தானாஹ் மேராஹ்-வில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒப் செலமாட் 22 சோதனையின் போது, அவ்வாடவர் போலீசிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக, அனுமதிக்கப்படாத இடத்தில் காரை U-TURN செய்ததாக தெரியவந்துள்ளது.
சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இதர ஓட்டுநர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காரை செலுத்திய அவ்வாடவரை மடக்கி பிடித்த போது அவர் முறையான ஆவணங்களைக் கொண்டிருக்காதது உறுதி செய்யப்பட்டதாக, தானாஹ் மேராஹ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மோஹட் ஹாக்கி ஹஸ்புல்லாஹ் கூறினார்.
அவ்வாடவரின் காரை சோதனையிட்டதில் பல வகையிலான பட்டாசுகளை உள்ளடக்கிய பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் அதனை பறிமுதல் செய்ததாகவும் மோஹட் ஹாக்கி விளக்கினார். மேல் நடவடிக்கைக்காக அந்நபர் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.