கோலாலம்பூர், மார்ச் 29-
முந்தைய அரசாங்கங்களில் இருந்தவர்கள், தற்போது மடானி அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்ற கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
சிறுபான்மை குழுவினராக செயல்படும் அவர்களது அம்முயற்சிகளை கண்டறிந்து துடைத்தொழிக்க வேண்டுமென துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்க எதிர்ப்பாளர்களான அத்தரப்பினரின் முயற்சிகள் பெரும்பான்மை மக்களின் சிந்தனைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாலிருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். இல்லையேல், மக்களுக்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் அரசாங்கம் வகுக்கின்ற திட்டத்திற்கு, அவை பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.
உதாராணமாக, இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே உதவித்தொகையை வழங்கும் நோக்கில் அரசாங்கம் நாட்டின் முதன்மை தரவு தளமான – PADU-வை அறிமுகப்படுத்தியிருக்கின்ற சூழலில், மக்களின் தனிநபர் விவரங்களை எல்லாம் பொருளாதார அமைச்சு தோண்டி எடுப்பதாக, அத்தரப்பினர் எதிரான கருத்துக்களை முன்வைப்பதை டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடி சுட்டிக்காட்டினார்.