ஷாஹ் அலாம், மார்ச் 29-
சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் உட்பட எந்தவொரு நபர்களுக்கும் சிறையில் சிறப்பு உபசரணைகள் வழங்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்பவே, அனைத்து கைதிகளும் உபசரிக்கப்படுவதாக, மலேசிய சிறைத்துறை தலைமை இயக்குநர் டத்தோ நோர்டின் முஹம்மது கூறினார்.
தற்போது, காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டத்தோ ஸ்ரீ நஜிப் உட்பட அனைத்து கைதிகளும் 1995 சிறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைதிகளுக்கு சிறப்பு உபசரணையை சிறை அதிகாரிகள் வழங்கினால், அது விதிமுறையை மீறும் செயல். அத்தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என டத்தோ நோர்டின் முஹம்மது குறிப்பிட்டார்.
அண்மையில்,காஜாங் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள பேச்சாளர் வான் ஜீ வான் ஹஸ்ஸின், சிறையில் டத்தோ ஸ்ரீ நஜிப்-புக்கு சிறப்பு உபசரணைகள் வழங்கப்படுவதாகவும் இதர கைதிகளைப் போன்று, அவர் சிறை ஆடைகளை அணிவதில்லை எனவும் கூறியிருந்தார்.