புத்ராஜெயா, மே 17-
மருத்துவர் பற்றாக்குறை நிலவும் மாவட்ட மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி, சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மது ரட்ஸி அபு ஹாசன்-னுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ட்ஸுல்கெப்பிலி அஹ்மத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பற்றாக்குறையைக் களைய, தமது அமைச்சு நடுத்தர கால அடிப்படையிலும் நீண்டக்கால அடிப்படையிலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
நாட்டில் 147 பொது மருத்துவமனைகளும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார கிளினிக்குகளும் உள்ளன.
ஆட்பல பற்றாக்குறை காரணமாக, அவற்றில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் அவர்களது பணிச்சுமை குறித்த புகார்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
அது தவறில்லை என்றாலும், கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் தவிர்க்க வேண்டுமென ட்ஸுல்கெப்பிலி அஹ்மத் வலியுறுத்தினார்.
கெடாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில், நோயாளிகளை அதிக நேரம் காக்க வைத்திருந்ததற்காக, மருத்துவர் ஒருவர் மன்னிப்புக் கோரி பதாகை ஒன்றை வைத்திருந்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலானது குறித்து ட்ஸுல்கெப்பிலி அஹ்மத் அவ்வாறு கருத்துரைத்தார்.