90 ஆம் ஆண்டுகளில் அரசாங்க வாகனங்கள் விநியோகம் மற்றும் நிர்வகிப்பு தொடர்பில் Spanco செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகையில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதமர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் விசாரணை செய்யவிருக்கிறது.
அந்த முன்னாள் பிரதமரும், அவரின் காலத்தில் நிதி அமைச்சராக இருந்து முக்கிய பிரமுகர் ஒருவரையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரணை செய்யவிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
அந்த முன்னாள் பிரதமரின் பெயரை அஸாம் பாக்கி வெளியிடவில்லை என்றாலும் அவர் துன் மகாதீர் முகமதுவாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இந்த ஊழல் தொடர்வில் புலன் விசாரணைக்காக யாரையும் எஸ்.பி.ஆர்.எம் அழைக்கக்கூடும் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.
அரசாங்க வாகனங்கள் விநியோகம் மற்றும் அவற்றின் நிர்வகிப்பு மீதான ஒப்பந்தம் குறித்து யார் யார் முடிவெடுத்தார்களோ அவர்கள் அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று அஸாம் இன்று விளக்கினார்.
அரசாங்க வாகனங்களை விநியோகம் செய்யும் ஒரே நிறுவனமாக கடந்த 1993 ஆம் ஆண்டிலிருந்து Spanco செண்டிரியான் பெர்ஹாட் விளங்கி வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் டான் ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட நாட்டின் முன்னணி கோடீஸ்வரர் ஒருவரின் கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள வங்கி கணக்கை எஸ்.பி.ஆர்.எம் முடக்கியுள்ளது.