புத்ராஜெயா, மார்ச் 8 –
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஹோட்டல் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணை, கத்தி முனையில் மடக்கி இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதுடன், அவரை காயப்படுத்திய குற்றத்திற்காக ஹோட்டல் உபசரணைப் பணியாளர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 18 ஆண்டு சிறைத் தண்டனையை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
30 வயது ம். முகிலன் என்ற அந்த ஹோட்டல் பணியாளர், தனக்கு எதிரான தண்டனையை ரத்து செய்யக் கோரி செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி அகமாட் சைடி இப்ராஹிம் தள்ளுபடி செய்தார்.
ஹோட்டலின் மதுபான பிரிவில் பணியாற்றியவரான முகிலன், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் 2 ஆம் தேதி அதிகாலை 6.45 மணியளவில் ஜோகூர் பாருவில் உள்ள ஒரு ஹோட்டலில் 22 வயது பெண் பிரமுகருக்கு எதிராக பாலியல் பலவந்தத்தை புரிந்து, அந்தப் பெண்ணை காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.