கெரிக், ஏப்ரல் 12-
பேராக், கெரிக், பத்து 11-இல் உள்ள கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் நினைவிடத்திற்கு அருகே, ஆற்றோரத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்றிருந்த ஆடவரை, திடிரென வந்த யானை ஒன்று தாக்கியதில் அவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.
நேற்று இரவு மணி 7 வாக்கில், வயிற்றுப்போக்கு காரணமாக அவர் அவ்விடம் சென்ற போது எதிர்பாராத அச்சம்பவம் நிகழ்ந்ததாக, பேராக் வனவிலங்கு பாதுகாப்பு துறை இயக்குநர் யூசோப் ஷாரிப் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, அப்பகுதியில் சுமார் 12 பேர் இருந்த நிலையில், அந்த யானை அவரை மட்டுமே தாக்கியுள்ளது.
யானையின் மிதிக்கு ஆளான பெல்டா பெர்சியா-வைச் சேர்ந்த அவ்வாடவருக்கு விலா எலும்பு, இடது கால் எலும்பு ஆகியவை முறிந்ததோடு, தலையில் ரத்த கசிவும் ஏற்பட்டதாக யூசோப் ஷாரிப் குறிப்பிட்டார்.
பின், அந்நபர் மேற்கட்ட சிகிச்சைக்காக ஈப்போ ராஜா பேரமைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, யூசோப் ஷாரிப் கூறினார்.