குவாந்தான், ஏப்ரல் 12-
பகாங், கெந்திங் ஹைலான்ட்ஸ்-சிலுள்ள கிளப் ஒன்றில் கடந்த சனிக்கிழமை கலவரத்தில் ஈடுபட்டதாக எண்மரை போலீஸ் விசாரணைக்காக தேடி வருகின்றது.
சம்பந்தப்பட்ட கிளப்பில் இருந்த CCTV காணொலி பதிவை ஆராய்ந்ததில், 22 முதல் 46 வயதிற்கு உட்பட்ட 8 ஆடவர்கள் அடையாளம் காணப்பட்டதாக, பகாங் போலிஸ் தலைவர் டத்தோ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, அக்கலவரத்தில் ஈடுபட்டிருந்ததற்காக கைது செய்யப்பட்ட 4 உள்நாட்டு ஆடவர்கள் மீது டெமெர்லோஹ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அக்குற்றத்தை ஒப்புக்கொண்ட வேளை, தலா ஈராயிரத்து 200 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்கின் மறுசெவிமடுப்பு வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், சம்பந்தப்பட்ட கலவரம் குறித்தும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தகவலறிந்தவர்கள் அருகாமையிலுள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்கும்படி, யாஹ்யா ஒத்மான் கேட்டுக்கொண்டார்.