புத்ராஜெயா, மார்ச் 30-
KK மார்ட் வர்த்தகத் தளத்தில் இன்று இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைப்புட்டின் நசுட்டின் இஸ்மாயில்- லும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக PKR கட்சியின் பாசிர் குடாங் எம்.பி. ஹாசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
அல்லா என்று பொறிக்கப்பட்ட காலூறைகளை விற்பனை செய்த KK மார்ட் – கடைக்கு எதிரான சர்ச்சையை தணிப்பதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளதாக அந்த எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாஹ் தமது அச்சத்தை தெரிவித்து இருப்பதுடன் இதற்கு பொறுப்பான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அரச மலேசிய போலீஸ் படையினரும் இவ்விவகாரத்தில் எந்தவொரு தரப்பும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று நினைவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பல்வேறு இனங்கள் மற்றும் சமயத்தவர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்படாமல் இருக்க இவ்விவகாரம் உடனடியாக கையாளப்பட வேண்டும் என்று ஹாசன் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.