கோலாலம்பூர், மார்ச் 30-
மலேசியாவிற்குள் நுழைந்துள்ள ஓர் இஸ்ரேலிய ஆடவர், கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது, 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்டதில் அந்த நபருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 7.15 மணியளவில் கோல சிலாங்கூரில் உள்ள ரமலான் சந்தையில் 42 வயதுடைய அந்த ஆடவரையும், 40 வயதுடைய அவரின் மனைவியையும் புக்கிட் அமான் கடுங் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவு கைது செய்துள்ளது.
அந்த தம்பதியர் கைது செய்யப்பட்ட பின்னர் கோலசிலாங்கூரில் உள்ள அவர்களின் வீட்டை சோதனையிட்ட போலீசார், வீட்டின் முன்நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவர்களின் காரில் கைப்பையுடன் ஒரு துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மலேசிய ஆடவர்தான், அந்த இஸ்ரேலிய ஆடவருக்கு துப்பாக்கிகளை விநியேகித்த இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஹோட்டலில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட அந்த இஸ்ரேலியப் பிரஜை, பிரான்ஸ் நாட்டின் கடப்பிதழைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த ஆடவர் இஸ்ரேலிய நாட்டின் உளவுத்துறையை சேர்ந்த ஏஜண்டா? என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அந்த இஸ்ரேலிய ஆடவர் பிடிபட்டதைத் தொடர்ந்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.