கோலாலம்பூர், ஏப்ரல் 02 –
இஸ்லாம் சார்ந்த உணர்வுப்பூர்வ விவகாரங்களை விவாதிப்பதில் கவனமாக செயல்படுமாறு அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கும் சமூக தலைவர்களுக்கும் அம்னோ சமய மன்றம் நினைவுறுத்தியுள்ளது.
அது இஸ்லாமியர்களிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதோடு விவாதங்களை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் சாடும் நிலைமை ஏற்படுத்திவிடும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நாட்டிலுள்ள இஸ்லாம் அல்லாதவர்களை இழிவுபடுத்தும் வகையில் கூறப்படும் காபிர் என்ற சொல் நிராகரிக்கப்பட வேண்டுமென கல்வியமைச்சர் பட்லினா சிடேக் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி அந்த மன்றம் அவ்வாறு கூறியது.
அந்த சொல் இஸ்லாம் அல்லாதவர்களைக் குறிப்பதற்காக பயன்படுத்துவதால், எவ்வித எதிர்மறை உணர்வைக் கொள்ள தேவையில்லை என அம்னோவின் சமயம் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பு, இந்நாட்டிலுள்ள இஸ்லாம் அல்லாதவர்களின் மனதை புண்பட செய்யும் காபிர் சொல்லைப் பயன்படுத்த வேண்டாமென தனது பிள்ளைகளுக்கு தாம் கூறியிருந்த கூற்று தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான மன்னிப்பையும் பட்லினா சிடேக் கூறியிருந்தார்.