இஸ்லாமிய சமய விவகாரங்கள் தொடர்பான அலுவல்களில் அரசியல்வாதிகள் குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள் தலையிட வேண்டாம் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இத்ரீஸ் எச்சரித்துள்ளார்.
சட்டமன்றங்களில் இஸ்லாமிய சட்டங்கள் இயற்றப்படுவது தொடர்பான சிறப்பு நடவடிக்கைக் குழுவில் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள முஸ்லில் அல்லாதவர்களும் இடம் பெற வேண்டும் என்று Beruas நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோ ஹாம் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் சுல்தான் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இஸ்லாமிய சட்டங்கள் இயற்றுதல் தொடர்பாக கூட்டரசு அரசாங்கம் மற்றும் மாநில அரசு கொண்டுள்ள அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்கு சம்பந்தப்பட்ட சிறப்புக்குழு முழு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் அந்த குழுவில் முஸ்லிம் அல்லாத சட்ட நிபுணர்களும் இடம் பெற வேண்டும் என்று Beruas எம்.பி. முன்மொழிந்து இருப்பது ஏற்புடையது அல்ல. அந்த குழு, இஸ்லாமிய சமய சட்டங்களை மட்டுமே ஆய்வு மேற்கொள்வதற்கும், இயற்றுவதற்கும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நிபுணத்துவக் குழுவாகும் என்று சுல்தான் விளக்கினார்.