ஷாஹ் அலாம், மார்ச் 27-
சமூக ஊடகத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கி பரவலாகிவரும் காணொலியில் ஆடவர் ஒருவர் இஸ்லாம் சமயத்தையும் அரச மலேசிய போலீஸ் படையையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அவ்விவகாரம் தொடர்பில் இதுவரையில் 21 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருப்பதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்நபர், ஜெர்மனி, ஹாம்பர்க்-க்கில் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நாட்டிலிருந்து வெளியேறி விட்டதாக கூறிய ரசாருதீன் ஹுசைன், அவ்விவகாரம் தொடர்பில், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய காணொலியில் உள்ள அந்த நபர், இஸ்லாம் சமயத்தை இழிவுபடுத்தியதுடன் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் தொடர்பான விவகாரங்களில் போலீசின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்ததாக ரசாருதீன் ஹுசைன் தெளிவுப்படுத்தினார்.