பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 03-
நாட்டில் பல இனத்தவர்கள் வாழ்ந்தாலும், மக்களிடையே புரிந்துணர்வு திறன் குறைந்து வருவதை, அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனையால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளின் வழி புலப்படுத்துவதாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
அது போன்ற சூழல் மீண்டும் நிகழாமல் இருக்க மலேசியர்கள் ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்பதோடு, ஒவ்வொரு இனத்தின் கலாச்சாரங்களை புரிந்துக்கொள்வது அவசியம் என்றாரவர்.
இந்நாட்டில் இஸ்லாம் மட்டுமே யாரும் தொட்டு பேச கூடாத மதமல்ல. இதர மதத்தினருக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே நமக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டுமென கூறுவது சரியல்ல. நாமும் அவர்களை மதிக்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.
மதத்தின் புனிதத்தன்மையை எந்தவொரு மதத்தினரும் விட்டுக்கொடுக்கக்கூடாது. காலுறையில் இதர சமயத்தினரின் புகைப்படம் இருந்திருந்தாலும், அவர்களும் அதனை விட்டுக்கொடுக்காமல் இருந்திருப்பார்கள்.
சமயம் சார்ந்த விவகாரங்கள் அனைத்து தரப்பினரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென எப்.எம்.தி உடனான நேர்க்காணலில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.