சிராம்பான், மார்ச் 3,
உடல் பருமன் காரணமாக பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி, சிரம்பான், துவான்கு ஜாபார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 230 கிலோ எடை கொண்ட 31 வயதுடைய நபர், பெயர் வெட்டப்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதால், அவரை மருத்துமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம், ஏ.பி.ம் எனப்படும் மலேசிய பொது தற்காப்புப் படையினரின் உதவியை நாடியது.
வழக்கமான வாகனத்தில் அவரை கொண்டு செல்ல முடியாது என்பதைவிட அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவதற்கே பெரிய ஆள்பலம் தேவைப்பட்டதால், பொது தற்காப்புப்படையினரின் உதவி நாடப்பட்டது. நேற்று சனிக்கிழமை 4.40 மணியளவில் துவான்கு ஜாபார் மருத்துவமனையை வந்தடைந்த 6 வீரர்கள், சக்கரம் பூட்டப்பட்ட ராட்ஷச கட்டிலின் மூலம் அந்த மனிதரை நகர்த்தி மருத்துவமனை வெளிவளாகத்திற்கு கொண்டு வந்தனர்.
முன்னதாக, மருத்துவமனையின் வார்ட்டிலிருந்து ஏ.பி.ம் லோரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அந்த நபரை கொண்டு வருவதில் சுமார் அரை மணி நேரம் வீரர்கள் கடுமையாக போராடினர். பின்னர் ஹைட்ரோலிக் இயந்திரத்தின் மூலம் அந்த நபர், லோரியில் ஏற்றப்பட்டார். இரவு 7.14 மணியளவில் இப்பணிகள் யாவும் நிறைவு பெற்றதாக ஏ.பி.ம் தெரிவித்துள்ளது.