6 க்கு பூஜியம் என்ற எண்ணிக்கையில் தோற்கடிப்போம்
*டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சவால் *
செலாயாங், மார்ச் 2 –
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், தனது பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதை அல்லது அதன் ம்.பி மக்கள் விலைக்கு வாங்கப்படுவதை தடுப்பதற்காக பெர்சத்து கட்சி, தனது அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவிருக்கிறது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சியின் தாசெக் கெலுகோர்,ம்.பி வான் சைபுல் வான் ஜான் அம்பலப்படுத்தியிருப்பதைப் போல தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்வார் தலைமையிலான அரசாங்கத்தினால் விலைக்கு வாங்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் “கொல்லைப்புற முயற்சிகள்” இந்த சட்டத்திருத்தத்தின் வாயிலாக தடுத்து நிறுத்தப்படும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
பெர்சத்து கட்சியின் இந்த உத்தேசத் சட்டத்திருத்தம் அங்கீகரிக்கப்படுமானால், தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை பகிரங்கமாக ஆதரிக்கும் பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியை விட்டு இன்னும் விலகவில்லை. எனவே அந்த ஆறு எம்.பி.க்களும் அழைக்கப்பட்டு, அவர்களின் உண்மையான ஆதரவு யார் பக்கம் என்பது குறித்து வினவப்படும்.
அந்த அறுவரும் அன்வாரை ஆதரிப்பதாக தொடர்ந்து பிடிவாதமாக இருப்பார்களேயானால் , அந்த 6 தொகுதிகளிலும் இடைத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு Bersatu கட்சி தயாராகும்.
அப்படி இடைத் தேர்தல் நடைபெறுமானால், அந்த 6 தொகுதிகளிலும் 6 க்கு பூஜியம் என்ற எண்ணிக்கையில் பெர்சத்து கட்சி, மகத்தான வெற்றி பெற்று, அத்தொகுதிகளை தற்காத்துக்கொள்ளும். இதில் எதிராளிகள் தோற்கடிப்பது திண்ணம் என்று முகைதீன் சூளுரைத்தார்.
இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சத்து கட்சியின் சிறப்பு பேராளர் மாநாட்டில் பெரிக்காத்தான் நேஷனலின் தலைவருமான முகைதீன் இதனை தெரிவித்தார்.