ஜோகூர், மே 17-
ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர், விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைப்பதற்கு நாளை சனிக்கிழமை தடுப்புக்காவல் அனுமதி பெறப்படும் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.
19 க்கும் 62 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 பேரும் நாளை காலையில் ஜோகூர்பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்படும் என்று கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.
கொலை குற்றச்சாட்டு குற்றவியல் சட்டமான 302 ஆவது பிரிவின் கீழ் அவர்களை தடுத்து வைப்பதற்கு அனுமதி பெறப்படும்.
அதேவேளையில் இச்சம்பவம் தொடர்பில் போலீசாரின் விசாரணை விரிவாக நடைபெறுவதற்கு உரிய வாய்ப்பை அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டும் என்று கமிஷனர் குமார் கேட்டுக்கொண்டார்.
Jemaah Islamia பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவன் என்று நம்பப்படும் முகமூடி அணிந்த 22 வயது சந்தேகப்பேர்வழி, இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த போலீஸ் நிலையத்தின் பின் வழியாக நுழைந்து, போலீஸ்காரர் ஒருவரை பாராங்கினால் வெட்டிக் கொன்றதுடன் மற்றொரு போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளான்.
தொடர்ந்து தாக்குதலை நடத்த அந்த சந்தேகப் பேர்வழி முற்பட்ட போது, போலீஸ் நிலையத்தில் இருந்த இதர போலீஸ்காரர்களால் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.