புத்ராஜெயா, ஏப்ரல் 16-
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவித்து இருக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற தனது மேல்முறையீட்டு மனுவை ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினரால் விசாரணை செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் தாம் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, தமக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை மீண்டும் நடைபெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாம் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தை ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய குழுவினர் விசாரணை செய்ய வேண்டும் முகைதீன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் உதவி பதிவதிகாரி நூருல் அஸ்ரினா முகமது யூசுப் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமது வழக்கறிஞர் தேஹ் போஹ் தேய்க் மூலம் முகைதீன் இந்த விண்ணப்பத்தை செய்துள்ளார்.
எனினும் இந்த மேல்முறையீட்டு வழக்கை ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரணை செய்ய வேண்டுமானால் அப்பீல் நீதிமன்றத் தலைவரிடம் கடித வாயிலாக விண்ணப்பிக்குமாறு முகைதீன் யாசினை பதிவதிகாரி நூருல் அஸ்ரினா கேட்டுக்கொண்டார்.