பாரிட் புந்தார், ஏப்ரல் 16-
சிலாங்கூர் – பேராக் எல்லை நகரான தஞ்சோங் மாலிமையும், கடற்படை நகரான லுமூட்- டையும் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவிருப்பதை பேரா மாநில அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
சிலாங்கூர், பந்திங்கையும், பேரா, தைப்பிங்கையும் ஒன்றிணைக்கும் 233 கிலோ மீட்டர் தூரத்தைக்கொண்ட WCE எனப்படும் மேற்கு கரையோர விரைவு நெடுஞ்சாலை தற்போது கட்டம் கட்டடமாக திறக்கப்பட்டு வரும் வேளையில் தஞ்சோங் மாலிமையும், லுமூட்டையும் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவிருப்பதை பேரா மாநில அரசு கோடிகாட்டியுள்ளது.
இந்த புதிய நெடுஞ்சாலை திட்டம், நிதி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நிதி அமைச்சின் கவனத்தில் இருந்து வரும் பத்து பிரதான திட்டங்களில் தஞ்சோங் மாலிமையும், லுமூட்டையும் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை திட்டமும் ஒன்றாகும் என்று பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுமானால் தஞ்சோங் மாலிமிற்கும், லுமூட்டிற்கும் இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.