நாடு முழுவதும் பிப்ரவரி 1 முதல் 7 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிளின் சிறப்பு நடவடிக்கையின் போது 1,325 மோட்டார் சைக்கிள்களை சாலைப் போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களும் சாலையில் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பிற்கு இணங்காத காரணத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சாலைப் போக்குவரத்துத் துறையின் மூத்த இயக்குநர் டத்தோ லொக்மான் ஜாமான் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையின் போது 97,366 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டதுடன் பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் 25,967 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இச்சோதனையின் போது சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 6,001 வழக்குகள் கண்டறியப்பட்டதாக லொக்மான் ஜாமான் கூறினார்.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள், சாலை தடைகள், மோட்டார் சைக்கிள் செல்லும் முக்கிய வழிகளை உள்ளடக்கிய சோதனைகள் ஆகியவற்றின் கண்காணிப்பு முறையின் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லொக்மான் ஜாமான் விவரித்தார்.