கோலாலம்பூர், மார்ச் 27-
ஆட்சியாளர்களையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து அவமதித்து, காணொளி வெளியிட்டு வரும் ஒரு மலேசியரான கணேஷ்பரன் நடராஜாவை பிடிப்பதற்கு அனைத்துலக போலீஸ் பிரிவான இன்டர்போல்- லிடமிருந்து சிவப்பு நோட்டீஸ் பெற முடியவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ மோஹட் ஷுஹைலி மோஹட் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இனம், மதம், ஆட்சியாளர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மலேசிய போலீஸ் துறை கையாண்டு வரும் 3R விவகாரம், அனைத்துலக போலீஸ் பிரிவான Interpol பட்டியலில் இடம் பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
எனவே 3R பிரிவின் கீழ் கணேஷ்பரனை பிடிப்பதற்கு மலேசிய போலீஸ் துறை இதற்கு முன்பு செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு Interpol- லின் சிவப்பு நோட்டீஸ் அனுமதியை பெற முடியவில்லை என்று டத்தோ ஸ்ரீ மோஹட் ஷுஹைலி விளக்கினார்.
இதன் காரணமாகவே கணேஷ்பரனின் மலேசிய அ னைத்துலக கடப்பிதழை ரத்து செய்யுமாறு மலேசிய குடிநுழைவுத்துறையை போலீசார் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு கணேஷ்பரனின் அனைத்துலக கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் மோஹட் ஷுஹைலி குறிப்பிட்டார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கணேஷ்பரன் மலேசியாவை விட்டு, வெளியேறிவிட்டார். அதன் பின்னர் அவர் தாயகத்திற்கு திரும்பவில்லை. அவர் தற்போது ஜெர்மனியின் துறைமுக நகரான ஹம்பேர்க்- கில் இருப்பதாக நம்பப்படுகிறது.
மதம், இனம் மற்றும் அரச பரிபாலனத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தி, காணொளி வெளியிட்டு வரும் கணேஷ்பரனுக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 3R பிரிவின் கீழ் 22 விசாரணை அறிக்கைகளை புக்கிட் அமான் போலீசார் திறந்துள்ளதாக மோஹட் ஷுஹைலி தெரிவித்தார்.
கணேஷ்பரன் ஆகக்கடைசியாக வெளியிட்டுள்ள காணொளியில் இஸ்லாமிய சமயத்தையும், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ் ஷாஹ்- வையும் அவமதித்துள்ளார்.
அதேவேளையில் மலேசிய போலீஸ் படையினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாறுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.