பினாங்கு, மார்ச் 27-
சட்டவிரோதமான முறையில் மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரம் வெள்ளியை வைப்புத்தொகையாக பெற்று, மோசடி செய்ததாக வர்த்தகர் ஒருவர், இன்று பட்டர்வொர்த்தில் இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
57 வயது R.G. சந்திரசேகரன் என்ற அந்த வர்த்தகருக்கு எதிராக மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரசேகரன், 2013 ஆம் ஆண்டு நிதி சேவை சட்டத்தின் 10 ஆவது விதியின் கீழ் எவ்வித செல்லத்தக்க லைசென்ஸின்றி, சட்டவிரோதமான முறையில் எம். சிவநேஸ்பரன் என்பவரிடமிருந்து 8 லட்சத்த 20 ஆயிரம் வெள்ளியை முன்பணமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை 10.44 மணியளவில் பினாங்கு, செபேறாங் பெராய் உத்தாரா, தாமான் தெராத்தாய் இன்டாஹ்-வில் உள்ள ஒரு வீட்டில் சந்திரசேகரன் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது 50 மில்லியன் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் சந்திரசேகரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிராக ஐந்து குற்றச்சட்டுகளையும் மறுத்து சந்திரசேகரன் விசாரரணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் அவரை 35 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி நூர் ஐனி யுசோப் அனுமதி அளித்தார்.