ஜேராந்துட், மார்ச் 9 –
லோரியில் வெட்டுமரங்களை ஏற்றும் நடவடிக்கையின் போது கனரக இயந்திரத்தின் சக்கரத்தில் அரைப்பட்டு லோரி ஓட்டுநர் பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பகாங், ஜாலான் ஜெராந்துட் பாடாங் பியோல் சாலையின் 26 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
கோல லிப்பிஸை சேர்ந்த 41 வயதுசைபுல்னிசாம் சாக்காரியா என்ற லோரி ஓட்டுநரே இச்சம்பவத்தில் மாண்டதாக ஜேராந்துட் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.
கனரக இயந்திரம் வெட்டுமரங்களை லோரியில் ஏற்றியப்பின்னர் அந்த வெட்டு மரங்களை சங்கிலியால் பிணைக்கும் பணியில் லோரி ஓட்டுநர் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
வெட்டுமரங்களை சங்கிலியால் பிணைக்கும் நடவடிக்கை முடிந்து விட்டது என்று கருதிய கனரக இயந்திர ஓட்டுநர், வெட்டுமரங்ங்கள் மீதான இயந்திரத்தின் பிடியை தளர்த்தி, இயந்திரத்தை பின்நோக்கி நகர்த்திய போது கீழே விழுந்து கிடந்த லோரி ஓட்டுநர் மீது சக்கரம் ஏற்றியதாக அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.