பெட்டாலிங் ஜெய, மார்ச் 9 –
பெரிக்காத்தான் நேஷனல் வென்ற 6 நாடாளுமன்றத் தொகுதிகளும், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியும் காலியாகி விட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் அறிவிக்கத் தயாரா? என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று சவால் விடுத்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களாக போட்டியிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி க்கும் வழங்குவதாக அறிவித்து விட்டதைத் தொடர்ந்து அந்த 7 தொகுதிகளிலும் இடைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு வழிவிடும் வகையில் அவை காலியாகி விட்டன என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
கொல்லைப்புற வழியாக தங்கள் ஆதரவை நடப்பு அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள அந்த 6 நாடாளுன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் விட்டுச்செல்லக்கூடிய அந்த 7 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவும், செல்வாக்கும், பலமும் யார் பக்கம் உள்ளது என்பதை பரீட்சித்துப் பார்ப்பதற்கு இடைத் தேர்தலுக்கு வழிவிடப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சூளுரைத்துள்ளார்.
புக்கிட் கன்தாங், குவா மூசாங் , தஞ்ஜோங் காராங் , ஜெலி, குவாலா கங்சார் ,லாபுவான் ஆகிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிலாங்கூரில் செலாட் கிள்ளாங் சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் ஆதரவை டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.