கோத்தா பாரு, ஏப்ரல் 03-
கோலா க்ராய், டத்தாரான் லெமாங் மாநெக் உராய்-யில் உள்ள ஒரு பொதுக் கழிவறைக்கு முன், காதலியால் மூன்று முறை வயிற்றில் குத்தப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது சாக்கி ஹாரூன் தெரிவித்தார்.
28 வயதுடைய அப்பெண் காய்கறி வெட்டும் கத்தியை பயன்படுத்தி தனது 45 வயதுடைய காதலனை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. கொலை புரிந்த குற்றத்திற்காக அப்பெண்ணை கைது செய்ததாக முகம்மது சாக்கி கூறினார்.
சுங்கை தொங் செத்தியு திறங்காணு-விலிருந்து கோலா க்ராய்-யில் உள்ள சில இடங்களுக்கு பாதிக்கப்பட்டவர் அப்பெண்ணை அழைத்து வந்திருந்த வேளையில் இக்கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக முகம்மது சாக்கி தெளிவுப்படுத்தினார்.
அப்பெண்ணுடன் உடலுறவில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வாடவர் கத்தி குத்துக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முகம்மது சாக்கி மேலும் விளக்கமளித்தார்.