ஷாஹ் அலாம், மார்ச் 22.
நபர் ஒருவரை நோக்கி அவதூறான சொல்லை பயன்படுத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட காப்பார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் S. மாணிக்கவாசகத்திற்கு எதிரான தண்டனை ரத்து செய்யப்பட்டது.
அதேவேளையில் மாணிக்கவாசகத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட 100 வெள்ளி அபராதம், ரத்து செய்யப்பட்டதுடன், அந்த 100 வெள்ளி தொகையை அவரிடமே திருப்ப ஒப்படைக்கும்படி ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மாணிக்கவாசகம் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு 100 வெள்ளி அபராதம் விதித்து இருக்கும் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டில் அவருக்கு எதிரான தண்டனையையும், அபராதத் தொகையையும் ரத்து செய்வதாக நீதிபதி அஸ்லாம் சய்ண்ணுடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
மாணிக்கவாசகம், அவதூறான வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது மட்டுமின்றி ஆதாரமற்றது. அவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டில் குறைபாடு இருப்பதாக மாணிக்கவாசகத்தின் வழக்கறிஞர் மனோரகன் மலையாளம் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
தீர்ப்புக்கு பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் செய்தியாளர்களிடம் பேசினார்.
தனக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத் தொகை வெறும் 100 வெள்ளி என்றாலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து நீதி கேட்டு தாம் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்து இருப்பதாக அந்த முன்னாள் காப்பார் எம்.பி. மாணிக்கவாசகம் பெருமிதம் தெரிவித்துள்ளார் என்று மனோகரன் மலையாளம் குறிப்பிட்டார்.