பெட்டாலிங் ஜெயா, மே 18-
எண்ணெய் நிலையத்தில் ஆடவர் ஒருவர், தனது காருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்த வேளையில் அந்த காரின் எண்ணெய் டாங்கி திடிரென்று வெடித்தது. இச்சம்பவத்தில் அந்த காரின் உரிமையாளர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் நேற்று மாலை 4.10 மணியளவில் பெர்லிஸ், கங்கார், ரெப்போ எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்தது. இதில் புரோட்டான் ஈஸ்வரா ஏரோபேக் ரக கார் தீப்பிடித்துக்கொண்டு முற்றாக அழிந்தது.
அவசரத் தகவல் கிடைத்து அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்தை வந்தடைந்த தீயணைப்புப்படையினர், காரில் சூழ்ந்துக்கொண்ட நெருப்பு, எண்ணெய் நிலையத்தை பரவிடாமல் முழு வீச்சில் அணைத்து, கட்டுப்படுத்தியதாக பெர்லிஸ் மாநில தீயணைப்பு, மீட்புப்டை தலைவர் யுஷாரிபுதீன் முகமது யூசோப் தெரிவித்தார்.
காரின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசியின் திடீர் செயல்பாட்டினால், காரில் நிரப்பிக்கொண்டு இருந்த எண்ணெய்யின் வேதியல் தாக்கத்தில் கார் தீப்பற்றிக்கொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.