Georgetown, Dato Keramat காவல் நிலையத்தில் நுழைந்து, பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் HK MP5 துப்பாக்கியை கைப்பற்ற முயற்சித்த குடிபோதையில் இருந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயது மதிக்கத்தக்க ஆடவர் காவல்நிலையத்தின் நுழைவாயிலை திறக்க பணியிலிருந்த போலீஸ் அதிகாரியிடம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்ற முயற்சித்துள்ளார்.
காவல் நிலையத்திற்கு நுழைவதற்கான நோக்கத்தை தெரிவிக்குமாறு சந்தேகிக்கும் நபரிடம் அந்த அதிகாரி கேட்டதாகவும், அதனை பொருட்படுத்தாமல் அவ்வாடவர் காவல் நிலையத்திற்கு அத்துமீறி நுழைந்து அவதூறான வார்த்தைகளை பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சந்தேகிக்கும் நபரை போலீஸ் அதிகாரி அமைதிப்படுத்த முயன்று எச்சரித்த வேளை, அவ்வாடவர் தலை கவசத்தை கழற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியை தாக்க முயற்சி செய்துள்ளார்.
சிறுநீர் சோதனையில் சந்தேகிக்கும் அவ்வாடவர் மது அருந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக, அவ்வாடவர் மீது நான்கு குற்றப்பதிவுகள் இருப்பதை தொடர்ந்து, வருகின்ற புதன்கிழமை வரையில் அவர் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பினாங்கு போலீஸ் தலைவர் Datuk Hamzah Ahmad அறிவித்தார்.