கோலாலம்பூர், மார்ச் 2 –
ரவாங்கில் ஆயுதம் தாங்கிய மூன்று ஆடவர்களினால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர் ஒருவர், கடும் வெட்டுக்காயங்களுடன் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் சொந்தமாக காரை செலுத்தியவாறு , உயிரை காப்பாற்றக்கோரி, போலீஸ் நிலையத்தில் அடைக்கலம் புகுந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளது.
காரிலேயே ரத்தவெள்ளத்தில் காணப்பட்ட 47 வயதுடைய அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ரவாங், பாண்டார் கொந்த்ரி ஹோம்ஸ் நிலைய போலீசார், பின்னர் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் சுங்கைப் பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் னோர் அரிபின் மொகமட் னாசிர் தெரிவித்தார்.
ரவாங்கில் மாலை 5 மணிக்கு நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படும் இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.48 மணிக்கு போலீசார் புகார் ஒன்றை பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சுங்கை பூலோ மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபருக்கு உடலிலும், இரு கைகளிலும், தோள்பட்டையிலும் ஏற்பட்ட பலத்த வெட்டுக்காயங்களினால் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று னோர் அரிபின் மொகமட் னாசிர் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் இந்த தாக்குலை நேரில் பார்த்தவர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.