கிளந்தான், மார்ச் 27-
கிளந்தான், பச்சோக், ஜாலான் பத்தோர்-ரில் லாரியும் பெரோடுவா அல்ஜா ரக வாகனமும் விபத்துக்குள்ளானதில் அக்கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று மதியம் 1 மணியளவில், 43 வயது நோர் அஹ்மத் பட்ச்லி அப்துல் கனி ஓட்டிச் சென்ற பெரோடுவா அல்ஜா கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த எதிர்தடத்தில் நுழைந்ததோடு, அந்த லாரியின் வலது புறத்தை மோதிய பின், விபத்துக்குள்ளானதாக, பச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மொஹமட் இஸ்மாயில் ஜமாலுட்டின் தெரிவித்தார்.
அந்த விபத்தில் 35 வயது லோரி ஓட்டுநருக்கு நெற்றியில் காயமும் வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருப்பதாக மொஹமட் இஸ்மாயில் கூறினார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடல் சவப் பரிசோதனைக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநரை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக மொஹமட் இஸ்மாயில் விவரித்தார்.