கோலா குபு பஹாரு, ஏப்ரல் 01 –
கோலா குபு பஹாரு-வில் மலாய் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளதால், வரக்கூடிய இடைத்தேர்தலில் மலாய் வேட்பாளரை பக்காத்தான் ஹரப்பான் களமிறக்கினால் அக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக, மலாயாப் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் அவாங் அஸ்மான் பாவி தெரிவித்தார்.
மலாய் வேட்பாளரை முன்னிறுத்துவதன் வழி, கடந்த சிலாங்கூர் சட்டமன்ற தேர்தலில், பக்காத்தான் ஹரப்பான்-னுக்கு வாக்களிக்காத UMNO ஆதரவாளர்களை அக்கூட்டணி கவர்ந்திழுக்க முடியும். அத்துடன், அக்கூட்டணியின் அடிப்படை ஆதரவாளர்களான மலாய் அல்லாதவர்கள் வாக்களிக்க வெளியில் வராமல் போகும் சாத்தியத்தை சரிசமப்படுத்தமுடியும்.
மலாய்க்காரர்களின் ஆதரவை அதிகம் கொண்டுள்ள பேரிக்காதான் நசியனால் கடந்த தேர்தல்களில் ஹுலு சிலாங்கூர்-ரையும் அதன் கீழ் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய அவாங் அஸ்மான் பாவி, தமது அந்த பரிந்துரை விவேகமான ஒன்று எனவும் கூறினார்.
கோலா குபு பஹாரு-வில் மலாய்க்காரர்கள் 46 விழுக்காடு, சீனர்கள் 30 விழுக்காடு, இந்தியர்கள் 18 விழுக்காடாக உள்ள வேளை, எஞ்சியவர்கள் 5 விழுக்காடாக உள்ளனர்.
கடந்த 3 தவணைத் தேர்தல்களில் அந்த தொகுதியை வென்று வந்த டிஏபி-யைச் சேர்ந்த லீ கீ ஹியோங் கடந்த மாதம் 21ஆம் தேதி புற்றுநோயால் இறந்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.