ஷாஹ் அலாம், ஏப்ரல் 16-
வருகின்ற மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர், கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய் வாக்காளர்களின் ஆதரவை பெறுவது பேரிக்காதான் நசியனாலின் முக்கிய இலக்காக இருக்காது என அகாடெமி நுசான்த்தரா-வை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன் தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களின் ஆதரவு ஏற்கனவே அக்கூட்டணியின் வசம் உள்ளது. தேர்தலில் அக்கூட்டணியிலுள்ள உறுப்புக் கட்சிகளில் ஒன்று சீனர் அல்லது இந்தியரை வேட்பாளராக நிறுத்தினாலும் மலாய்க்காரர்கள், பேரிக்காதான் நசியனாலை ஆதரிப்பார்கள்.
குறிப்பாக, 70 முதல் 80 விழுக்காடு மலாய் வாக்காளர்களின் ஆதரவை அக்கூட்டணி பெறும் என்பதுடன் அது பாஸ் அல்லது கெராக்கான் வேட்பாளரா என்பதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று அஸ்மி ஹாசன் கூறினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 ஆயிரம் பெரும்பான்மை வாக்குகளில் வென்றிருந்த கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியை டிஏபி இம்முறை தற்காத்துக்கொள்ளும் என அஸ்மி ஹாசன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.