பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுத்து வரும் தமது நிலைப்பாட்டை சந்தேகக் கண்களுடன் பார்க்கும் சில தரப்பினரை பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் சாடினார். அதேவேளையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தாம் இருப்பதாக யாராவது வீண் பழி சுமத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் எச்சரித்துள்ளார்.
தம்மை களங்கப்படுத்தும் நோக்கில் அவதூறுகளை பரப்பி வரும் தரப்பினர், பாலஸ்தீன விவகாரத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதில் தமது நேர்மை குறித்து கேள்வி எழுப்பும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.