சுங்கை பூலோ, ஏப்ரல் 06-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 452.8 ஆவது கிலோ மீட்டரில் சுங்கை பூலோ அருகில் 7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் இதர அறுவர் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 11.37 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்து ரவாங் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொல்ட்டார் தெரிவித்தார்.
சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஐந்து Four Wheel Drive வாகனங்கள், ஒரு கார் மற்றும் ஒரு விரைவு பேருந்து சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காயம் அடைந்தவர்கள் அனைவரும் இ.எம்.ஆர்.எஸ் வண்டிகளின் மூலம் மருத்துவமனைக்கு கெண்டு செல்லப்பட்ட வேளையில் Four Wheel Drive வாகனம் ஒன்றின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் அந்த விரைவு பேருந்தில் இருந்த இரண்டு ஓட்டுநர்களும், 24 பயணிகளும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளனர் என்று அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.