ஜொகூர் பாரு, மே 15-
ஜொகூர், ஜொகூர் பாரு-வில், மதுபோதையில் ஆடவர் ஒருவர் செலுத்திய வாகனம் மோதி, சுமார் 600 மீட்டர் தூரம் வரையில் இழுத்துசெல்லப்பட்ட மலேசிய படகோட்டும் வீராங்கனை கடும் காயங்களுக்கு இலக்கானார்.
கடந்த சனிக்கிழமை EDL நெடுஞ்சாலையில், நிகழ்ந்த அந்த விபத்தில் சிக்குண்டவர், இப்ராஹிம் சுல்தான் பொலிடெக்னிக்-க்கில் இயந்திர பொறியியல் துறையில் கல்வி பயின்றுவரும் 22 வயதுடைய சித்தி நூருல் மசிதா எலியாஸ் என அடையாளம் கூறப்பட்டது.
வாகனத்திலுள்ள டாஷ்காம் காமிரா பதிவு, விபத்தை நேரில் கண்டவர்கள் வழங்கிய தகவலின் படி, மதுபோதையில் வாகனத்தை அபாயகரமாக செலுத்திய ஆடவர், சித்தி நூருல் மசிதா சென்றுக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளை மோதியுள்ளார்.
காயங்களுக்கு இலக்காகியுள்ள அந்த வீராங்கனை, தற்போது, கொலம்பியா மருத்துவமனையில் சிகிச்சையை பெற்று வருவதாக, சம்பந்தப்பட்ட பொலிடெக்னிக்-க்கின் இயந்திர பொறியியல் துறையின் மாணவர் சங்கம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
இதனிடையே, அந்த விபத்தை உறுதிபடுத்திய ஜொகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ரவுப் செலாமாட், அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.