சிங்கப்பூர், மே 15-
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக லாரன்ஸ் வோங் இன்று பதவியேற்றுள்ளார்.
பதவியேற்புச் சடங்கு இன்று புதன் கிழமை இரவு 8 மணியளவில் சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் நடைபெற்றது.
சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் பதவி உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், / லாரன்ஸ் வோங்- கை நாட்டின் புதிய பிரதமராக அறிவித்து, பதவி நியமனக் கடிதத்தை வழங்கினார்.
சிங்கப்பூர் பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட 51 வயது லாரன்ஸ் வோங், எந்தவித சலுகைகளும் அளிக்காமல், அச்சமின்றி விருப்புவெறுப்பின்றி, தனது அறிவுக்கும், திறனுக்கும் ஏற்ப கடமைகளை நிறைவேற்றுவதற்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.
லாரன்ஸ் வோங், பிரதமர் பொறுப்புடன் நிதியமைச்சராகவும் தொடர்வார். லாரன்ஸ் வோங் – கின் புதிய அமைச்சரவையில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியென் லூங், மூத்த அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.