ஈப்போ, மார்ச் 4 –
நான்கு வருடங்கள் அல்லது அதற்கும் குறைந்த தண்டனை காலத்தை கொண்டுள்ள நன்னடத்தை மிக்க கைதிகளை சிறைச்சாலையில் தொடர்ந்து வைப்பதைவிட அவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் அரசாஙகத்தின் உத்தேசப் பரிந்துரை தவறாக பயன்படுத்தப்படக்கூடும் என்று அரச சாரா இயக்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது சிறைச்சாலையில் தனது தண்டனை காலத்தை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் போன்றவர்களை சிறைச்சாலையிலிருந்து விடுவித்து, வீட்டுக் காவலில் வைப்ப்பதற்கு இந்த உத்தேச நடைமுறை தவறாக பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக ப்ரோஜேக் சாமா என்ற மலேசிய நிலைத்தன்மை அமைப்பு நினைவுறுத்தியுள்ளது.
சிறைச்சாலை என்பது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் இடம் மட்டுமல்ல. தாங்கள் செய்த தவற்றுக்காக ஒவ்வொரு கைதியும் வருந்தியாக வேண்டும், குற்ற உணர்விலிருந்து திருத்தியாக வேண்டும், அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திட வேண்டும் என்பதுதான் சிறைச்சாலையின் உன்னத நோக்கமாகும்.
குறைந்த பட்ச வசதிகளை அனுபவித்து வரும் கைதி ஒருவருக்கு, வீட்டுக்காவலில் வைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்குமானால், தான் புரிந்த குற்றத்தின் கடுமையை உணர்வதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும். யார் வேண்டுமானாலும் சிறைச்சாலையிலிருந்து வீட்டுக்காவலில் வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடும். இது 1ம்.டி.பி நிதியில் முறைகேடும், லஞ்ச ஊழலும் புரிந்த முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கும் இந்த சலுகை காட்டப்பட்டு விடலாம்.
அரசாங்கத்தின் இந்த சலுகைத் திட்டம், நாட்டின் வளங்களை சுரண்டியவர்கள், சுதந்திரமாக இருப்பதற்கு வழங்கக்கூடிய ஒரு கடவுச்சீட்டாக மாறிவிடக்கூடாது.
எனவே இந்த சலுகைத் திட்டத்தை அமல்படுத்ததற்கு முன்னதாக இது தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது