கோலாலம்பூர், மார்ச் 4 –
கோலாலம்பூரில் வரும் சனிக்கிழமை, மகளிர் அமைப்பு ஒன்று, நடத்தவிருக்கும் ஊர்வலம் தொடர்பில் போலீஸ் துறைக்கு நான்கு முறை நோட்டீஸ் வழங்கப்பட்டும் , அந்த ஊர்வலத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆராயப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசென் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்துடன் விசாரணை செய்யப்படும் என்று ஐஜிபி குறிப்பிட்டார். அந்த ஊர்வலம் தொடர்பில் அந்த மகளிர் அமைப்பின் நோட்டீஸ் இன்று காலையில் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வு நடைபெறும் இடம் உட்பட சில விவகாரங்களை போலீஸ் துறை பரிசீலிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மகளிர் பேரணி தொடர்பான நோட்டிஸ் தொடர்பில் கையாளப்பட்ட முறை குறித்து டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவரிடம் வினவப்படும் என்று இன்று பான்டார் சுலாத்தான் சுலைமான் போலீஸ் நிலையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தையொட்டி வுமென்ஸ் மார்ச் மலேசியா என்ற மகளிர் அமைப்பு இந்த ஊர்வலத்தை நடத்தி வருகிறது.